ஆஹா.. புல்லரிக்குது.. மாடியில் சிக்கிய பெண்ணை தூக்கி காப்பாற்றிய கமாண்டோ படை! புயலுக்கு இடையே திகில்
சென்னை: மணப்பாக்கம் பகுதியில் வீட்டு மாடியில் சிக்கி இருந்த பெண்ணை கமாண்டே படை வீரர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தூக்கி கீழே இறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து கடும் இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். வெள்ளம் வீடுகள், கட்டிடங்களில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மாநகரின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத அளவுக்கு பல இடங்களில் மழை பாதிப்பு கடுமையாக இருக்கிறது.
நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக பெரு மழையின் தாக்கத்தால் செல்போன் சார்ஜ் இல்லாமல் அவசர உதவி கூட கேட்க இயலாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடைகள், உணவகங்கள் மூடப்பட்டதால் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள், உணவின்றி தவித்து வருகின்றனர். தண்ணீர் வீடுகளின் தரைத் தளங்களில் புகுந்த காரணத்தால் படகுகள், பரிசல்கள் மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் துயரங்கள் வீடியோக்களாக வெளியாகி வருகின்றன.

அரசு ஒரு பக்கம் முழு வீச்சில் மீட்புப் பணிகளையும் உதவிகளையும் செய்து வந்தாலும், அதற்கு உறுதுணையாக தன்னார்வலர்களும், பொதுமக்களும் மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளை மேற்கொண்ட் வருகிறார்கள். தொடர் பணிகளின் காரணமாகவும், மழை குறைந்ததாலும் சென்னையின் பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிந்து இருக்கிறது. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை இன்னும் சரியாகவில்லை. வீடுகளின் மாடிகள், மேல் தளங்களில் சிக்கிய மக்கள் கீழே இறங்க முடியாமல் உணவின்றி தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் கமாண்டே படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மணப்பாக்கம் பகுதியில் வீட்டின் மேல் தளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டார்கள். அப்போது ஒரு பெண்ணின் இடுப்பில் துணியை கட்டி 3 ஜன்னல் சன்சைட் மேல் ஏறி நின்று அந்த பெண்ணை தூக்கி கடும் சிரமங்களுக்கு இடையே கீழே இறக்கினர். பரபரப்பான இந்த மீட்பு காட்சி காண்போரை நெகிழ வைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications