வட கடலோர மாவட்டங்களை மிரட்டும் டிட்வா புயல்! கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர்: கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டிட்வா புயல் எதிரொலியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது அந்தந்த மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் வடதமிழகம், புதுவை, அதையொட்டிய ஆந்திர கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக் கடலை அடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் இருப்போர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடு நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் உதவி தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.
இந்த டிட்வா புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயலால் சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளஇட்ட பகுதிகளில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன.
இதனால் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் பலர் கடல் சீற்றத்தை பார்வையிட சென்றுள்ளார்கள். காசிமேட்டில் பெரிய கற்களை தாண்டி எழும்பும் கடல் நீர், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செல்பி எடுத்து வருகிறார்கள்.
அது போல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications