Cyclone Ditwah: தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு.. மிக பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியேற்றம்!
ராமநாதபுரம்: டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. டிட்வா புயல் எதிரொலியாக தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வத்துடன் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இலங்கை அருகே உருவாகியுள்ள 'டிட்வா' புயலால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் அருகில் உருவாகி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தும் எச்சரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. தனுஷ்கோடி கம்பிப்பாடு கடலோரத்தில் மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
டிட்வா புயல் தற்போது இலங்கை கடற்கரையோரமாக சீராக நகர்ந்து வங்காள விரிகுடாவை நெருங்கி வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த புயல் நவம்பர் 30 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கிழக்கு கடற்கரையின் பெரும் பகுதிகளில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் சூறைக்காற்று வீசும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிட்வா புயல் கடந்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவடைந்துள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகரும்போது, நவம்பர் 30 அதிகாலையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் நுழைய வாய்ப்புள்ளது.
புயலின் வேகம் மற்றும் இயக்கத்தைப் பொறுத்து நிலைமைகள் விரைவாக மோசமடையக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று குறிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடல் நீர் மீனவர்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் தங்கியிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications