வலுவிழக்கும் டிட்வா புயல்.. சென்னைக்கு ஆபத்து இல்லையா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்
சென்னை: இலங்கைக்கு தென் கிழக்கே உருவான டிட்வா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. இருப்பினும் இலங்கையில் இது வலுவிழக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் சென்னை தப்பித்ததா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து கேள்வி பதிலாக, தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "டிட்வா புயல் பலவீனமடைந்திருக்கிறது. எனவே சென்னையில் மழை இருக்காதா?

இந்த புயல் தற்போது இலங்கையில் கரையை அடைந்திருக்கிறது. இருப்பினும் இது இலங்கையைத் தாண்டி மீண்டும் கடல் பகுதிக்குள் வந்து வலுவடைய தீவிரமாக முயற்சிக்கும். ஆனால், புயலுக்கு தேவையான ஈரப்பதம் மிக்க காற்று போதுமான அளவு கிடைக்காது என்பதாலும், உலர்ந்த காற்று மட்டுமே இருக்கும் என்பதாலும், புயல் தனது வலுவை இழந்து சென்னையை நெருங்கும் போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மட்டுமே இருக்கும். எனவே இது கஜா, வரதா மற்றும் தானே போன்ற புயல்களை போல தீவிரமாக இருக்காது. அதே நேரம் கனமழை சேதம் கணிசமான அளவில் இருக்கும்.
சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மழை எப்போது?
பதில்: இந்த மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி மழை தொடங்கும். இருப்பினும் நாளை அதாவது நவம்பர் 29ஆம் தேதி இரவு மழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் பலத்த காற்று வீச கூடுமா?
பதில்: இல்லை, இதுவரை பலத்த காற்றுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதிகபட்சமாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசக்கூடும். இதற்கு முன்னர் வரதா புயல் நேரத்தில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கஜா புயல் நேரத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்திலும், தானே புயல் நேரத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது.
டெல்டா மற்றும் உள் மாவட்டங்களின் நிலை என்ன
பதில்: புயலானது இலங்கையின் ஜாப்னா கடல் பகுதிக்கு அருகே வந்தவுடன் அது தன்னை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும். இது நவம்பர் 29ஆம் தேதி நடக்கும். இந்த நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறையில் அதிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும், புயல் மேலும் முன்னேறும்போது கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான அளவுக்கு மழையும் பெய்யும்.
புயலுக்கு 'டிட்வா' என ஏன் பெயரிடப்பட்டது?
பதில்: வங்கக்கடல், அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள், இலங்கை, ஓமன், தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 13 நாடுகள் பெயர்களை வழங்குகின்றன. இந்த 13 நாட்களும் ஏற்கனவே பெயர்களை கொடுத்திருக்கும். இவ்வாறு பெறப்பட்ட 169 பெயர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த புயலுக்கு மாலத்தீவு நாடு வழங்கப்பட்ட பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
"மிச்சாங் புயலைப் போன்று மழையை கொடுக்குமா?"
பதில்: இல்லை, மிச்சாங் புயல் சென்னையில் 400 மில்லி மீட்டர் அளவுக்கு 24 மணி நேரத்தில் மழை பொழிவை கொடுத்தது. அந்த அளவுக்கு மழைப்பொழிவு இந்த முறை சாத்தியமில்லை.
கேள்வி: "சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வேலூர், இராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களுக்கு டிசம்பர் 1ம் தேதி மழை இருக்குமா?"
இந்த மாவட்டங்களுக்கு நாளை முதல் மழை தொடங்கும். நாளை மறுநாள் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். வாய்ப்பிருப்பின் டிசம்பர் 1ம் தேதி மழை பெய்யலாம். சில இடங்களில் 150 மில்லி மீட்டர் வரை கூட மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications