வேலையைக் காட்டும் பெஞ்சல்.. ஒன்லி ஒர்க் ப்ரம் ஹோம்! வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. முக்கிய அட்வைஸ்!
சென்னை: பெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும். புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், கடற்கரைகள் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதை தவிர்க்க வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் (Fengal) புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
காரைக்கால் - மாமல்லபுரம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் காற்றின் வேகத்தைப் பொறுத்து புயலின் திசையில் மாறுபாடு ஏற்பட்டு கரையை கடக்கும் இடமானது சென்னையை நெருங்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவிலிருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது பல பகுதிகளில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது சென்னை விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், கடற்கரைகள் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதை தவிக்க வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே,

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்: இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்: இன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும். புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications