”6 மணி நேரம்.. 90 கிமீ வேகம்..” பேயாட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. புதுவை அருகே கரையை கடந்தது
சென்னை: சுமார் 6 மணி நேரமாக பேயாட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல் இரவு 11. 30 மணியளவில், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. புயல் கரையை கடந்த போது 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கரையை கடந்த பெஞ்சல் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுவிலக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டும் இன்றி உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இத்தகைய சூழலில், வங்கக் கடலில் கடந்த மாதம் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

இந்த தாழ்வுப்பகுதி 25 ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மறுநாளே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஆனது. முதலில் தற்காலிக புயலாகவாவது இது மாறும் என கடந்த மாதம் 27-ந்தேதி வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
ஆனால், தாழ்வு மண்டலம் மேலும் வலு இழந்ததால், புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே வானிலை ட்விஸ்ட் கொடுத்தது. வலுக்குறைந்தது என சொல்லப்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையத் தொடங்கியதாகவும், இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் 28 ஆம் தேதி கூறியது. அதன்படி, வங்கக் கடலில் நகர்ந்து வந்து கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது.
இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது.பெஞ்சல் புயல் நேற்று மாலை சென்னை - புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்- காரைக்கால் இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்க தொடங்கியது. முதலில் கணிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாகவே கரையைக் கடக்க தொடங்கியது. சரியாக மாலை 5.30 மணியளவில் புயலின் முதல் பகுதி கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையைக் கடக்க தொடங்கிய போது, மரக்காணம், புதுவையில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னையிலும் தரைக்காற்று பலமாக வீசியது. மழை மிதமாகவே இருந்தது. எனினும் நேற்று நள்ளிரவில் இருந்தே மழை மிதமாகவும் கனமழையாகவும் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று மாலை கரையைக் கடக்க தொடங்கிய புயல் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக கரையக் கடக்க எடுத்துக்கொண்டது. புயல் கரையைக் கடக்கும் போது புதுவையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கடலூரில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
சென்னை பெசண்ட் நகர், மெரினா பகுதிகளில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. இரவு 10 மணியளவில் புயல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மாமல்லபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 40 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து 10 கிமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் நள்ளிரவு 1 மணியளவில் கரையை கடந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நள்ளிரவு 1 மணியளவில் பெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது என்று கூறியுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சுமார் 6 மணி நேரமாக பேயாட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல் இரவு 11. 30 மணியளவில், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. புயல் கரையை கடந்த போது 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கரையை கடந்த பெஞ்சல் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுவிலக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications