பேய் மழை.. 24 மணி நேரத்தில் 51 செ.மீ.. மயிலம் ரெக்கார்டு.. உச்சபட்ச மழை கொட்டித் தீர்த்தது!
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான மழை மயிலத்தில் கொட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது அதன் வேகம் மணிக்கு 7 கி.மீ ஆக இருந்தது. கடந்த 6 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் பெரும்பாலும் நகராமல் இருந்தது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ மழையும் புதுச்சேரியில் 48 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கடலூருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்றும் இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியதுமே சென்னையில் மழை விட்டுவிட்டது. அதேசமயம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்புரம், மயிலம், திண்டிவனம் ஆகிய பகுதிகள் முழுக்க மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது. நேற்று அதிகாலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், நேற்று மதியம் சிறிது நேரம் மழை விட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் தொடங்கியது.
புயல் கரையை கடக்கும்போது 70 - 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்தவகையில் தான் மயிலம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 51 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி அருகே நகராமல் ஒரே இடத்தில் இருப்பதால் தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் பல பகுதிகளில் அதிகனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications