அப்பாடா! 48 மணி நேரத்திற்கு பிறகு சென்னையில் குறைய தொடங்கிய மழை.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்
சென்னை: சென்னையில் கடந்த 2 தினங்களாக விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது குறையத் தொடங்கியது. படிப்படியாக மழை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மழை எப்போது தான் நிற்கும் என்று ஏங்கி தவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வங்க கடலில் நிலை கொண்டு சென்னையை உருக்குலைத்துப் போட்டது மிக்ஜாம் புயல். வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் கவிழ்த்து விட்டு ஆந்திராவை நோக்கி நடையை கட்டி இருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னை மாநகரில் கடந்த 2 தினங்களகா விட்டு விட்டு பெய்த நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய பெருமழை பேய்மழை கொட்டியது. இன்று காலை முதல் சுமார் 11 மணிநேரம் இடைவிடாமல் கனமழை வெளுத்தது.

சென்னையில் 35 மணிநேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. விடிய விடிய 2 தினங்களாக பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் முக்கிய சாலைகளும் ஆறு போல மாறின. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
விடாது மழை பெய்து கொண்டே இருந்ததால் மழை எப்போது விடத்தொடங்கும் என்று பார்த்துக் கொண்டு இருந்தனர். மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 120 கி.மீட்டர் தூரம் தள்ளி சென்றது. 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த நிலையில் தள்ளி சென்றது மிக்ஜாம் புயல். தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தற்போது சென்னையில் மழை குறையத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை கடந்து சென்றுவிட்டது. சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 120 கி.மீ தூரத்திற்கு மிக்ஜாம் புயல் நகர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூரை நெருங்கி கொண்டு இருக்கிறது. நெல்லூருக்கு 80 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னையை கடந்து சென்றாலும் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனால் மழை எப்போது தான் நிற்கும் என்று ஏங்கி தவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications