சென்னையில் மோசமான நிலைமை.. உணவு, மெழுகுவர்த்தி கிடைப்பதில் சிக்கல்! மிக்ஜாம் புயலால் மக்கள் அவதி
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஹோட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளதால் பேச்சுலர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதோடு மின்வெட்டு அமலில் இருக்கும் நிலையில் மெழுகுவர்த்தி கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக உருமாறி உள்ளது. இந்த புயல் நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.

தற்போது இந்த புயல் வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த புயல் ஆந்திரா நோக்கி மெதுவாக நகர்ந்து செல்கிறது. இந்த புயல் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஒரே நாளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கனமழை பெய்துள்ளது. அதோடு மொத்த சென்னையிலும் விடாமல் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதாக தலைநகர் ஸ்தம்பித்துள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீராக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளன. அதோடு வீடுகளை சுற்றி தேங்கி உள்ள மழைநீரால் பொதுமக்கள் வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர். இதுதவிர பல இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் மக்கள் மெழுகுவர்த்தியை நாடி இன்று கடைக்கு சென்றனர். ஆனால் தொடர் மழையால் வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்ற எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மெழுகுவர்த்தி கிடைக்காமல் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதோடு சென்னையை பொறுத்தமட்டில் ஏராளமான ‛பேச்சுலர்கள்' அறை எடுத்தும், வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் சமையல் செய்து சாப்பிட்டாலும் கூட இன்னொரு தரப்பினர் ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று சென்னையில் பல இடங்களில் ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ‛பேச்சுலர்கள்' உணவு வாங்க ஹோட்டல்களை தேடி சாலைகளில் அலைந்து சிரமப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications