மிரட்டும் மிக்ஜாம் புயல்.. முடிந்த வரை WFH கொடுங்க.. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அட்வைஸ்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் கரையை கடப்பதையொட்டி, டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், வடக்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் - மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மிக்ஜாம் புயல் கரையை கடப்பதையொட்டி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் சூறாவளிக் காற்றும் கனமழையும் பெய்யும் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகல் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கை: மேலும் இந்த சமயத்தில் மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் முடிந்த வரை பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.
கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்: இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Work From Home: அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications