அலறவிடும் மிக்ஜாம் புயல்.. வெளுக்க போகும் மழை! நாளை சென்னை மெட்ரோ இயங்குமா.. வந்த முக்கிய அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னை மெட்ரோ இயங்குமா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இது இப்போது சென்னையில் இருந்து சுமார் 230 கிமீ தொலைவில் இருக்கிறது.

இந்த புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் டிச. 5ஆம் தேதி இந்தப் புயல் கரையைக் கடக்க உள்ளது.
மிரட்டும் மிக்ஜாம் புயல்: புயல் காரணமாக இன்றிரவு சென்னையில் மழை தொடங்கினால் அது நாளை காலை வரை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்போது விட்டுவிட்டுப் பெய்யும் மழை இரவிற்குப் பிறகு கனமழையாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை சென்னையில் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலை எதிர்கொள்ளச் சென்னை மாநகராட்சி தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாளை மெட்ரோ சேவை இருக்குமா என்று பலருக்கும் சந்தேகம் இருந்த நிலையில், இதற்குச் சென்னை மெட்ரோ நிர்வாகம் பதிலளித்துள்ளது.
சனிக்கிழமை அட்டவணை: இது குறித்து சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "MICHAUNG புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கம்.. நாளை (04.12.2023) MICHAUNG புயல் காரணமாகத் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்... காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ: இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (04.12.2023) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசியத் தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications