பெருங்குடி மீது "மிக்ஜாம்"-க்கு அப்படி என்ன கோபமோ?வரலாறு காணாத அளவுக்கு மழையை கொட்டி தீர்த்திருக்கே!
சென்னை: வங்க கடலில் வலம் வந்த மிக்ஜாம் புயல் சென்னை பெருங்குடியில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்துவிட்டு இப்போது ஆந்திராவில் உக்கிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திரா மாநிலம் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவின் பாபட்லா அருகே சற்று நேரத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளது.

முன்னதாக சென்னை அருகே 30 மணிநேரம் ஆடி அசைந்து நகர்ந்து மிக்ஜாம் புயல். சென்னை அருகே நிலை கொண்டு நின்ற மிக்ஜாம் புயல் பெருமழையை கொட்டித் தீர்த்தது. ஆக்ரோஷமான புயல் காற்று சற்றே தணிந்து பெருமழை ஆவேசமாக கொட்டியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வரலாறு காணாத பெருவெள்ளத்தை சந்தித்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று வரை இடைவிடாத கொட்டிய பெருமழையால் ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஏரிகள் நிரம்பி உபரி நீரும் குடியிருப்புகளுக்குள் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்தன.
சென்னை திருவான்மியூர் பெருங்குடியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 74 செ.மீ மழை கொட்டித் தீர்த்துவிட்டது. பெருங்குடியில் டிச. 3-ந் தேதி 29 செ.மீ மழை பதிவானது. பெருங்குடியில் நேற்று டிச.4-ந் தேதியன்று மட்டும் 45 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
பெருங்குடிக்கு அடுத்ததாக சென்னை பூவிருந்தவல்லியில் 34 செமீ மழை பதிவானது. அதேபோல் வடசென்னையில் 24 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களில் 47 செ.மீ மழை வெளுத்திருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் டிச. 3-ந் தேதியன்று 23 செ.மீ மழையும் டிச.4-ந் தேதியன்று 24 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் பெருமழை ஒரு பக்கம்; பெருமழையால் வெள்ளம் இன்னொரு பக்கம்; இவற்றுடன் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம் இவை அனைத்துமே சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துவிட்டது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications