Cyclone in Chennai: மிக்ஜாம் புயல் நெருங்க நெருங்க.. தொடர் மழை எப்போது முதல் இருக்கும்.. வானிலை மையம்
சென்னை: மிக்ஜாம் புயல் வரும் 5-ம்தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, புயலின் தாக்கத்தால் தொடர் மழையை நாளை மாலை அல்லது இரவு முதல் எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- "நேற்று (01-12-2023) தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,

இன்று (02-12-2023) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு - தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும்.

இதன் காரணமாக நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.12.2023 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்." என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நாளை மாலை அல்லது இரவு முதல் தொடர் மழையை எதிர்பார்க்கலாம் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனியார் வானிலை நிறுவனமான சென்னை ரெயின்ஸ் பதிலளித்துள்ளது. முன்னதாக சென்னை ரெயின்ஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 30 நிமிடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
இது மிதமானது முதல் கனமழையாக இருக்கும். அதேவேளையில், மகாபலிபுரம் முதல் பாண்டிச்சேரி வரையிலான கடலோர பகுதிகளிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். புயல் நெருங்கி வரும் போது மழை நீண்ட நேரம் நீடிப்பதையும் மழைக்கு இடையேயான கால அளவு குறைந்து வருவதையும் ரேடார் இமேஜ் மூலம் காண முடிகிறது.












Click it and Unblock the Notifications