மிரட்டும் மிக்ஜாம்.. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. சென்னையில் மூழ்கிய சாலைகள்
சென்னை: மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது பிரதான சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது. மிக்ஜாம் என்று இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் வெள்ளநீரில் மிதந்த செல்கின்றன. பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகளான ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், இன்றும் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்களைக் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்களைக் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 504 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல், எக்ஸ் பக்கம், TNSMART செயலி மூலம் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் பகிரப்படும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்.
புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அறுந்துவிழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் வேண்டும். தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென்று குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும். எனவே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications