மிக்ஜாம் புயல் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இது இப்போது சென்னையில் இருந்து சுமார் 230 கிமீ தொலைவில் இருக்கிறது.

இது நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் டிச. 5ஆம் தேதி இந்தப் புயல் கரையைக் கடக்க உள்ளது. மேலும், இது தீவிர புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.
புயல்: புயல் காரணமாக இன்றிரவு சென்னையில் மழை தொடங்கினால் அது நாளை காலை வரை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாளை கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை இந்த நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் புயல் சென்னைக்கு அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றிரவு தொடங்கும் கனமழை நாளையும் காலை வரை தொடரும் என்றே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையைச் சமாளிக்கச் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இதனால் இன்று (டிச. 3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல நாளை (டிச .4) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications