தமிழகத்துக்கு ரூ.5,000 கோடி.. புயல் பாதிப்பால் ராஜ்யசபாவில் மத்திய அரசிடம் கேட்ட திருச்சி சிவா
டெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் வலியுறுத்தினார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை முதல் சென்னையில் மழை என்பது இல்லை. முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் புயல், மழை பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலையில் அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு புயல் , மழை நிவாரணம் தொடர்பாக மத்திய அரசிடம் கேட்க உள்ளார். இந்நிலையில் தான் குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா பேசினார். அப்போது மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த விபரங்களை அவர் எடுத்துரைத்ததோடு, தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக திருச்சி சிவா கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிக கனமழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கனமழையை தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்து இருந்தது. இதுபோன்ற மழையை மிக்ஜாம் புயல் தான் ஏற்படுத்தி உள்ளது. இந்த புயல் ஆந்திராவுக்கு சென்றிருந்தாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சாலைகள் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டுள்ளன. அனைத்து வகையான நீர்நிலைகலும் நிரம்பி உள்ளது. கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் நிரம்பின. பல நீர்நிலைகள் உடைந்துள்ளன. அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மிகவும் கடினமான சூழலை தமிழகம் சந்தித்துள்ளது. ரோடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கூட மக்களுக்கு வழங்க முடியவில்லை. பால், மருந்து பொருட்கள் வழங்க முடியாத நிலை நிலவுகிறது. மாநில அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மொத்த கேபினட் அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், மீட்பு படையினர் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
புயல் பற்றி அறிந்ததுமே மாநில அரசு மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று பேசியுள்ளார். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications