Cyclone Montha: கரையை கடக்கத் தொடங்கிய மொந்தா புயல்! காக்கிநாடா கடற்கரையில் பலத்த காற்றுடன் மழை
ஹைதராபாத்: வங்கக் கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் காக்கிநாடா கடற்கரையில் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கடற்கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 24 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து 26ஆம் தேதி அது ஆழ்ந்த காற்றழுத்தமாகவும் மாறியது.

இந்த நிலையில் நேற்று இது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மொந்தா என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆந்திரா காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இந்த புயல் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரை காற்று வேகமாக வீசுகிறது. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் பேய் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
புயல் கரையை கடக்க தொடங்குவதற்கு முன்பே காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, டாக்டர் அம்பேத்கர் கோனாசீமா, அல்லுரி சீதாராம ராஜு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது போல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். காக்கிநாடா துறைமுகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர துறைமுகங்களான விசாகப்பட்டினம், கங்காவரம், மச்சிலிப்பட்டினத்தில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இங்கெல்லாம் காற்று பலமாக வீசி வருகிறது. அடை மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications