110 கிமீ வேகத்தில் சூறாவளி.. ‘மொந்தா’ புயல் எங்கே எப்போது கரையை கடக்கும்.. இப்போது எங்கு இருக்கிறது
சென்னை: ஆந்திராவின் மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவில் மொந்தா புயல் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து பார்த்தால் 310 கி.மீ தென்கிழக்கு திசையில் மொந்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக ஆந்திரா முழுக்க மிக கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் 'மொந்தா' புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 520 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 570 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோ ரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" இவ்வாறு நேற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மொந்தா புயல் ஆந்திராவின் மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காக்கிநாடா அருகே இரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
இதனிடையே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மொந்தா புயல்', இன்று மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்பதால், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications