சென்னைக்கு அலர்ட்.. நாளை உருவாகிறது புயல் சின்னம்! வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், இதனால் அக்.22,23ம் தேதிகளில் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இரண்டாவது வடகிழக்கு பருவமழை. தென்மேற்கு பருவமழை தற்போது முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழைப்பொழிவு இருக்கிறது.

சென்னை தொடங்கி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. மறுபுறம் அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவாகியிருப்பதால் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு அரபிக்கடலில் கேரளாவின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உருவாகியிருக்கும் வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இது வலுப்பெற்றால் புயல் சின்னமாக மாறும். இருப்பினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அக்.22,23ம் தேதிகளில் கனமழை பெய்யும்.
அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை சென்னையில் கனமழை என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இந்த காலங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும். எனவே, சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி முன்கூட்டியே ஓரளவு முடித்திருப்பதால், மழைநீர் தேங்கும் பிரச்சனை ஓரளவு சரியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications