வெள்ள நீரில் மிதந்து வரும் சடலம்.. யார் அது? நெல்லை ஜங்ஷன் பகுதியில் கடும் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் வெள்ள நீரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்தது. 3 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கனமழையால், நெல்லை மாநகரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. அதேபோல் ஜங்ஷன் பேருந்து நிலையத்தையே மொத்தமாக மூழ்கடித்துள்ளது வெள்ளம்.
மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும், அதிகனமழை காரணமாக வெள்ளநீர் சாலைகளை துண்டித்துள்ளதாலும், நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை வழியாகச் செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நெல்லை ஜங்ஷன் முழுக்க கடைகளில் ஒரு தளம் வரை வெள்ள நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து வருகிறது. நெல்லை சிந்துபூந்துறை மற்றும் உடையார்பட்டி பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில இடங்களில் மின்சார கோபுரங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் மிதந்து செல்வது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மீட்புப் படையினர் வெள்ளத்தில் மிதக்கும் நபரின் உடலை மீட்டு அரசு அவரின் அடையாளங்களை விரைந்து கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications