பொத்துகிட்டு ஊத்தும் வானம்.. வங்கக் கடலில் வலுவாகும் பூதம்! தமிழநாட்டில் இன்னும் 4 நாளைக்கு சம்பவம்!
சென்னை: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருகிறது. இது மேலும் மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஜனவரி 12-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் குளிர் நிலை தற்போது ஓரளவு குறைந்து வருகின்றது. இதனிடையே, மாநிலத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது லேசானதும் மிதமானதுமான மழை பதிவாகி வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்திய இரு நாட்களாக மிதமான மழை பெய்து, அப்பகுதிகளில் நிலவும் குளிர் தணிந்து, இனிமையான காலநிலை உருவாகியுள்ளது.
இந்த மழைக்கு தமிழகத்தின் மேல் வளிமண்டலத்தில் நிலவும் மாற்றங்களும், இலங்கைக்கு அப்பாலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் தான் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுன்றனர். இதனால் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வருகிறது. இது அடுத்த கட்டமாக தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 10ஆம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழகக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால், வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, அதாவது அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 9ஆம் தேதி மதியம் தொடங்கும் மழை முதலில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதிக்கும் என்றும், பின்னர் அது படிப்படியாக கடலோர மாவட்டங்களிலும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 10 மற்றும் 11ஆம் தேதிகளில் சென்னை மற்றும் அதனைச் சூழ்ந்த கடலோர மாவட்டங்களில் பரவலான கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் காற்றழுத்த மாற்றங்கள் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழைப்பொழிவுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவே ஓரிரு இடங்களில் அதிகளவு கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காவிரி டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளைத் தொடர்ந்து, மாநிலத்தின் உள் மாவட்டங்கள், தெற்கு உள்மாவட்டங்கள் என மழை பரவலாக தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை, விவசாயிகளுக்கு ஒருபுறம் பயனளிப்பதோடு, மறுபுறம் சில இடங்களில் பயிர்கள் சேதமடையக்கூடிய சூழ்நிலையும் உருவாக்கக்கூடும். எனவே நிலைமையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications