இனி மழை குறையும்.. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது - வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு காரணமான, வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. உள் தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா இடையே தற்போது நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது. இது, இன்று வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு, ஏற்கனவே எதிர்பார்த்தபடி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாததால், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவுகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26 முதல் கனமழை பெய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications