வங்க கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! எப்போது கரையை கடக்கும்? எங்கெல்லாம் மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் - வங்க தேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சாகர் தீவுகள் - கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகல் கடக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. நேற்றும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 19 செமீ மழை பெய்தது. தென்காசி மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் நேற்றும் மழை கொட்டியது. நெல்லையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து 5 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரியில் இன்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் கோவை, நீலகிரியில் இன்று மழை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பல இடங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நீலகிரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறிய அறிவிப்பில், "வங்கக் கடலில் நீடித்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் - வங்க தேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சாகர் தீவுகள் - கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகல் கடக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.
முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. சென்னை, திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை, சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications