தமிழக விவசாயிகளே! " ஒரு 2 பேர் மீட் பண்றாங்களாம்" ஜன.11, 12, 13ல் கவனம்! டெல்டா வெதர்மேன் அட்வைஸ்!
சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் அறுவடை பணிகளை ஜனவரி 11 , 12, 13 ஆகிய தேதிகளில் இருந்து ஒத்தி வைக்குமாறும் இல்லாவிட்டால் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்துக் கொள்ளுமாறும் டெல்டா வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜனவரி 8, 2025க்கான வானிலை அறிக்கை

வானிலை அமைப்பு
==> தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இச்சுழற்சி தென்மேற்கு வங்ககடல் வந்தடையும்.
==> வளிமண்டலத்தின் மத்திய அடுக்குகளில் நிலவும் மேலைக்காற்றும், கீழடுக்குகளில் நிலவும் கீழைக்காற்றும் சந்தித்துக் கொண்டு ஜனவரி 10ம் தேதி இரவு முதல் 13ம் தேதி காலைக்குள் பரவலாக மழை வாய்ப்பை ஏற்படுத்தும்.
வானிலை எதிர்ப்பார்ப்பு
1. தமிழகத்தில் இன்று (08.01.2025) முதல் மூன்று நாட்களுக்கு (10.01.2025) மாலை வரை மழைக்கான வாய்ப்புகள் இல்லை. இரவு/அதிகாலை பனிப்பொழிவும், பகலில் வெயிலும் தொடரும்.
2. ஜனவரி 10ம் தேதி இரவு முதல் 13ம் தேதி காலை வரை தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும்.
3. குறிப்பாக ஜனவரி 11,12 தேதிகளில் #சென்னை #செங்கல்பட்டு #புதுச்சேரி #கடலூர் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #இராமநாதபுரம் #தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பதிவாகும். உள் மாவட்டங்களிலும் மிதமானது முதல் சற்றே கனமழையை ஏற்படுத்தும்.
4. டெல்டா & மத்திய மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் பலத்த மழை பதிவாகும்.
5. தமிழக விவசாயிகள் ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் அறுவடை பணிகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு:
==> இந்த மழைப் பொழிவு பெருமழையாக அமையாவிட்டாலும் அறுவடைக்கு தயாராகி வரும் பயிர்களையும், தயாராக உள்ள பயிர்களையும் பாதிப்படைய செய்யும். அதன் காரணமாக விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
==> முக்கியமாக BPT நெல் ரக அறுவடைக்கு தயாராகி விட்டால் ஜனவரி 10ம் தேதி மாலைக்குள் அறுவடை பணிகளை முடித்து, தானியங்களை மழைச்சாரல்/தூறல் படாதவாறு பத்திரப்படுத்தவும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது போல் தமிழகத்தில் மழைப் பொழிவு குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 71.6-73.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தெற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதியில் வரும் 9-ம் தேதியும், தென்மேற்கு வங்கக் கடலின் வடக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10-ம் தேதியும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications