Weather: டேஞ்சர் இல்லை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!
சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வங்கக்கடலில் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 18 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 19 தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதையடுத்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு- வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்
மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 24 மணி நேரத்திற்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வங்கக்கடலில் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை வருமாறு:
மழை எச்சரிக்கை
நாளை 22-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23-12-2024 மற்றும் 24-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications