காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 12 மணி நேரத்தில் புயலாக மாறும்.. இந்திய வானிலை மையம் அலர்ட்!
டெல்லி: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்குகி வருகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து விட்டு விட்டு கொட்டி வருகிறது.

இன்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், நாகர்கோவில், தென்காசி, மாவட்டங்களிலும் இரவு 8 மணியளவில் நல்ல மழை பெய்தது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக மிக்ஜாம் புயல் கரையை கடப்பதையொட்டி, டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை 4-ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் - மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிய்ட்ட அறிவிப்பில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும். புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போது 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தொடக்கத்தில் 18 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் குறைந்து 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக வட தமிழக மாவட்டங்களுக்கு புயல், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications