சென்னையில் விட்டு விட்டு மழை.. மிக்ஜாம் புயல் இருந்தும் தொடர் மழை இல்லாதது ஏன்.. முக்கிய தகவல்
சென்னை: மிக்ஜாம் புயல் உருவாகியுள்ள போதிலும், சென்னையில் இப்போது விட்டு விட்டு தான் மழை பெய்து வருகிறது. தொடர் மழையாக இல்லாமல் விட்டுவிட்டு மழை பெய்ய என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மாநிலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்கவில்லை. வானிலை மையம் கூட இயல்பை காட்டிலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைவாகவே மழை பெய்துள்ளதாக கூறியிருந்தது.

ஆனால். வடகிழக்கு பருமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது.
புயல்: இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று இது மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும் என்றும் வரும் டிச. 4ஆம் தேதி இது தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மிக்ஜாம் முயல் உருவாகும் முன்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நேற்றிரவு முதலே வடதமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விட்டு விட்டு மழை: இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இன்று அதிகாலை முதலே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர் மழையாக இல்லாமல் மழை விட்டு விட்டு பெய்கிறது. மழையை தரும் மேகங்கள் அலை அலையாக இருப்பதே இப்படி விட்டு விட்டு மழை வர காரணம் என்று சொல்லப்படுகிறது.
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மேகங்கள் இப்படி அலை அலையாக நகரும் நிலையில் கேப் விட்டு கேப் விட்டு மழை பெய்கிறது. அதேநேரம் இன்னும் சில மணி நேரத்தில் புயல் நெருங்கும் போது சென்னையில் தொடர் மழை பெய்ய ஆரம்பித்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகள்: மேலும், புயல் காரணமாக இப்போது வடகடலோர பகுதிகளான மாமல்லபுரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 70 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதேநேரம் நாளைய தினம் புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த வரும் காலங்களில் நகரும் போது அடுத்த 36 மணி நேரத்திற்கு மணி நேரத்திற்கு வடகடலோர பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை மைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில இடங்களில் 20+ செமீ மழை பெய்யும் என்று எச்சரிக்கிறார்கள்.
புயல் மழையை சமாளிக்க சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 100க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications