Ditwah cyclone: வடதமிழகத்தை நோக்கி வரும் டிட்வா புயல்! நவ.30-ல் சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை
சென்னை: டிட்வா புயலால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

'டிட்வா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த புயலானது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்லும்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக் கூடும்.
அதன்படி இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்.
இது தவிர ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (சனிக்கிழமை) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அது போல் புதுக்கோட்டை, திருச்சி,சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வட மாவட்டங்களில் சில இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும், மிக கனமழை வரை பதிவாகும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்து இருக்கிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications