டிட்வா புயலால் வெளுத்தெடுத்த கனமழை.. நேற்று அதிகபட்ச மழைப்பொழிவு இந்த ஏரியாதான்! முழு லிஸ்ட்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் நேற்று மழைப்பொழிவு அதிகம் என்பதைப் பார்க்கலாம்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால், வட தமிழகத்தில் அதிகனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிட்வா புயல் நள்ளிரவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை வந்தடைந்தது.

புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டப்படியே கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும் என்றும், இதனால் மழையின் தீவிரம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.
டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 160 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் இந்தப் புயல் நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழைப்பொழிவு வருமாறு:
கோடியக்கரை 250 மி.மீ
வேளாங்கண்ணி 133
திருவாரூர் 137
நன்னிலம் 123
திருத்துறைப்பூண்டி 113
நீடாமங்கலம் 93
வலங்கைமான் 89
குடவாசல் 74
முத்துப்பேட்டை 70
தங்கச்சிமடம் 134
தொண்டி 127
திருவாடானை 104
தீர்த்தாண்ட தானம் 104
பாம்பன் 99
ராமேஸ்வரம் 91
மண்டபம் 83
மயிலாடுதுறை 143
மணல்மேடு 94
சீர்காழி 137
கொள்ளிடம் 93
செம்பனார்கோவில் 172
புயல் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதி பலத்த மழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications