கொண்டைய மறைக்கலயே.. அதிமுக ஆட்சியில் வந்த ரூ.8,820 கோடி வடிகால் எங்கே? பாயிண்டை பிடித்த திமுகவினர்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்டு உள்ள பெரு மழை, வெள்ள பாதிப்பை குறிப்பிட்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ரூ.4000 மழை நீர் வடிகால் எங்கே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ரூ.8,820 கோடி மழை நீர் வடிகால் எங்கே என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. அடையாறு, கூவம் வடிநிலப் பகுதி, கோவளம், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.4,034 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அப்போது சட்டசபையில் அறிவித்தார். முதல்கட்டமாக அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதியில், உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று ரூ.1,101.43 கோடி மதிப்பில் 326 கிலோ மீட்டர் தூரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டட்டன.

அதேபோன்று சென்னை மெகா நகர மேம்பாட்டுப் பணி சார்பாக 390 இடங்களின் 125.27 கிலோ மீட்டர் தூரம் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்ட்ம் மூலமாக 141 இடங்களில் 48.28 கிலோ மீட்டர் தொலைவில் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டட்டன. குறிப்பாக மத்திய சென்னையில் அடையாற்றில் 406 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாடு நீடித்த நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,387 கோடி மதிப்பில் வடிகால் பணிகள் உலகவங்கி நிதி உதவியுடன் முழுமையாக அமைக்கப்பட்டட்டன.
மத்திய சென்னை பகுதியில் எவ்வளவு அதிகமாக மழை பொய்தாலும், இந்த வடிகால்வாய் வழியே அடையாற்றில் கலந்து மழைநீர் கடலுக்குச் சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1,261 கோடியில் தமிழ்நாட்டில் நீடித்த நிலையான நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் 450 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டன. அம்பத்தூர் சிட்கோ கால்வாய், நொளம்பூர் கால்வாய், பாடிக் குப்பம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய் நீர்வழி கால்வாய் ஆகிய 4 நீர்வழி கால்வாய்கள் 29 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்டீபன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர் தேங்கியதாக ரூ.25 கோடியில் 4,180 மீட்டர் நீளத்தில் வடிகால் அமைக்க தமிழ்நாடு அரசின் நகர்ப் புறசாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் எடுத்து கொள்ளப்பட்டு பணிகள் முடிந்தது. ரூ.200 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது அல்லாமல் ரூ.80 கோடியில் மாம்பலம் கால்வாய் சீரமைப்பு மற்றும் கரையோர வடிகால் பணிகள் னடைபெற்றன. வட சென்னை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தில் 780 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்க 2020ல் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3,220 கோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் பெறப்பட்டன.
இத்தகைய மழை நீர் வடிகால் திட்டங்களின் மூலம் சென்னையில் மழை நீர் வெள்ளம் தேங்காது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையின்போதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.8,820 மதிப்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் எங்கே என்று குறிப்பிட்டு வெளியான செய்தித்தாள் படத்தை திமுகவினர் பகிர்ந்து அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications