சென்னை மட்டும் இல்லை.. மேலும் 12 இந்திய நகரங்கள் தத்தளிக்க வாய்ப்பு இருக்காம்.. பகீர் ரிப்போர்ட்
டெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், பருவநிலை மாறுபாடு காரணமாக மேலும் 12 இந்திய நகரங்களில் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகரான சென்னை கடந்த சில நாட்களாவே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டி தீர்த்த கனமழை சென்னை மாநகரையே வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது. மழை விட்டு இரண்டு தினங்கள் ஆன போதும் கூட சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் உக்கிர தாண்டவம் ஆடிய கனமழையே சென்னையில் இன்று சந்தித்து இருக்கும் இந்த இன்னலுக்கு காரணம் ஆகும்.

பருவநிலை மாறுபாடு காரணமாக உலக அளவில் இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த பெரு வெள்ளத்துக்கு பருவ நிலை மாற்றமே காரணம் என்று இயற்கை ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. மிக்ஜாம் புயல் சென்னை மட்டும் இன்றி ஆந்திராவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு: வெள்ளத்தில் குடியிருப்பு கட்டிடங்கள் மூழ்கி கிடக்கும் காட்சிகளும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை இது போன்ற பெருமழை வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை சந்திப்பது இது முதல் தடவை கிடையாது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழையால் சென்னை நகரம் கடுமையான பாதிப்புகளை சந்திதது. பெரு நகரங்களில் முறையான திட்டமிடல் இன்றி ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் , நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவையே இத்தகைய பாதிப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி சென்னையில் உள்ள தட்டையான நிலப்பரப்பும் நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
எச்சரிக்கை மணி: சென்னையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த வெள்ள பாதிப்பு ஒரு எச்சரிக்கை மணியாகவே அமைந்து இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி கடலோரங்களில் உள்ள மேலும் சில இந்திய நகரங்கள் பெரும் வெள்ள பாதிப்பை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. எடுத்துக்காட்டாக கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் வெப்ப மண்டல புயல், ஆற்று வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதாம்.
அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்த மெட்ரோ நகரங்கள் ஏற்கனவே பருவநிலை ஏற்படுத்திய தாக்கங்களை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. மழை பொழிவு அதிகரிப்பு, வெள்ள பாதிப்பு அதேபோல், கடுமையான வறட்சி ஆகியவையும் ஏற்பட்டு வருகின்றன.
கடல் மட்டம் உயரும்: பருவநிலை மாற்றம் குறித்து உலக வங்கி அமைத்த குழு அளித்த ஆய்வறிக்கையின் படி, பூமத்திய ரேகைக்கு மத்தியில் உள்ள இந்தியாவில் உயர் அட்ச ரேகையைவிட கடல் மட்டம் உயரும் என்றும் இது கடற்கரை நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு இருந்தது. எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்றால், உப்பு நீர் உள்புகுவது, விவசாயத்தில் பாதிப்பு, நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படுவது மட்டும் இன்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
IPCC அறிக்கை: அதேபோல் கால நிலை மாற்றம் குறித்த IPCC அறிக்கையின் படி, கடல் நீர் மட்டம் உயர்வதால் இந்த நூற்றாண்டு இறுதியில் 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதில், மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நகரங்களில் கடல் மட்டத்தைவிட 3 அடி வரை ஆழத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications