மழை அறிவிப்பில் பல்லைக் காட்டும் வெயில்! வானிலை அறிக்கை மூலம் நாம் அறிவது என்ன?
சென்னை: வானிலை அறிக்கை மூலம் நாம் அறிவது என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: வானிலை அறிக்கை மூலம் நாம் அறிவது என்ன? நாம் வாழும் பகுதியில் / ஊர்தனில் அடுத்த சில முதல் பல மணிநேரங்கள் வரை மழை பொழியுமா? மழை என்றால் எவ்வளவு அளவில் பெய்யக்கூடும்? குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாம் வாழும் பகுதிக்கு அருகில் இருக்கும் கடல் பகுதியில் உருவாகியிருக்கிறதா? அது எப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமா மாறும்? அது புயலாக உருமாற்றம் அடையுமா?

இவ்வாறெல்லாம் செயற்கைக் கோள் எடுக்கும் படம் கொண்டு ஆராய்ந்து வானிலை அறிக்கை தரப்படுகிறது தானே. அதை வைத்து பயிர் செய்துள்ள விவசாயிகள் வாய்க்காலை முன்கூட்டியே வெட்டி விடுவார்கள். பயிர் அறுவடையை முன்கூட்டியே செய்வார்கள். தென்னை முதலிய மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க கிளைகள் / கீத்துகளை வெட்டுவது. மின்சாரத் துறை இன்னும் எச்சரிக்கையாக இருப்பது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது. அணைகளில் முன் கூட்டியே நீரை திறந்து விட்டு மழை நீரைப் பிடிக்க கொள்ளளவை அதிகப்படுத்தி வைப்பது... நதிக்கரையில் வாழும் மக்களை மேடான பகுதிக்கு மாற்றுதல். இவ்வாறாக "வானிலை அறிவிப்பு" என்பது பல்வேறு சூழ்நிலைகளில் நமக்கு உதவுகிறது. ஆனால் சில நேரங்களில் இயற்கையின் மாற்றங்களால் சொன்ன மாதிரியே அப்படியே நடந்தும் விடுவதில்லை.
சில நேரங்களில் மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் வெயில் பல்லைக்காட்டிக் கொண்டு அடிக்கும்.
ஆனால் அதற்காக வானிலை அறிக்கையையோ பள்ளிக்கு விடுமுறை விட்டதையோ குறை காண முடியாது. காரணம் எப்போதும் நமது இயந்திரம்,
அசம்பாவிதம் ஏற்பட்டாலோ பேரிடர் ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு தயார் செய்யுமாறு செயல்படும். எனவே எப்போதும் முன்னேற்பாடுகள், பேரிடர் மேலாண்மை, பேரிடருக்கு தயாராகுதல், நடக்க இருக்கும் கெட்ட நிகழ்வின் தாக்கத்தை குறைத்தல் அல்லது அதை முடிந்தால் தடுத்தல் போன்றவை நாம் காலம் காலமாக செய்து வரும் விசயம் தான்.
இருசக்கர வாகன ஓட்டிகளை தலைக் கவசம் அணிந்து வண்டி ஓட்ட சொல்வது அதனால் தான். இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் விபத்துக்குள்ளாகி தலைக்காயம் பட்டு மரணமடையப் போவதில்லை. எனினும் மருத்துவமனைகளுக்கு இருசக்கர வாகன விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு வரும் மக்களுள் பிரேதக் கிடங்குகளுக்கு வரும். பிரேதங்களுள் பெரும்பான்மை தலையில் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதால் என்பதை அறிய முடிகிறது.
இதனால் அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேற்சொன்ன விசயங்களில் எப்படி ஒரு நிகழ்வு நடக்கும் முன்னமே அதை நடக்காமல் இருக்க நாம் அதிக கவனம் எடுக்கிறோமோ? அதே போல நமது உடல் விசயத்திலும் ஒரு நோய் உருவாவதற்கு முன்னமே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வருடம் ஒருமுறை ஒரு உடல் நலம் சார்ந்த செக் அப் செய்து கொள்வதால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்பட இருக்கும் நோய்களை மிக ஆரம்பகட்டத்தில் அறிந்து அதற்குரிய வாழ்வியல் மாற்றங்கள் செய்து அந்த நோயை வர விடாமல் செய்ய முடியும்.
இந்தியாவில் நீரிழிவுடன் வாழ்பவர்கள் பத்து கோடி பேர் என்றால் நீரிழிவு இன்னும் கண்டறியப்படாமல் வாழ்பவர்கள் பத்து கோடி இருப்பார்கள். நீரிழிவிற்கு முந்தைய நிலை எனும் ப்ரீ டயாபடிஸ் நிலையில் பத்து கோடி பேர் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்க்காமல் நீரிழிவை கண்டறிய முடியாது. அவர்களுக்கு நீரிழிவின் அறிகுறிகள் தோன்றி அது கண்டறியப்படும் போது கணையத்தின் பாதி செல்கள் செயலிழந்திருக்கக்கூடும்.
நீரிழிவை முந்தைய நிலைகளில் கண்டறிந்து உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினால் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும். இது போன்றே ரத்த கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் , புற்று நோய், வாகன விபத்து, மனத்தாழ்வு நிலை, தனக்கே ஊறு விளைவிக்கும் நிலை என அனைத்து நோய்களும் முன்கூட்டியே கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் செய்யப்பட்டால் நமது உடலையும் உயிரையும் காக்க முடியும்.
உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே எனும் திருமூலர் கூற்றுப்படி வாழலாம். முன்னேற்பாடும் முன்னெச்சரிக்கையும் பிழையோ அச்சமோ இல்லை. மாறாக அதுவே நம் நீட்சிக்கான வழி. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications