சென்னை டூ கன்னியாகுமரி.. மழை முடிந்தது! இனி வறண்ட வானிலைதான்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில் வறண்ட வானிலை தொடங்கியுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை பெய்துள்ளது. இதர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதேபோல வெப்பநிலையை பொறுத்த அளவில், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 63 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு அதாவது, இன்று தொடங்கி பிப்.9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: எச்சரிக்கை ஏதுமில்லை” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குளிரை விட புழுக்கம் அதிகமாக தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் நிலையற்ற வானிலை உருவாகியுள்ளது. எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் தீவிரமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் மாறியுள்ளது.
குறிப்பாக கடந்த 1980களில் இருந்ததை விடவும் தற்போது உலகம் முழுவதும் கடல்கள் சூடாகியுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டாவது வானிலை இயல்பாக இருக்குமா? என பலரும் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications