இதான் சான்ஸ்.. சென்னையில் வியாபாரிகள் செய்த காரியம்.. ச்சே.. கொந்தளிக்கும் மக்கள்
சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பால், மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்து வரும் நிலையில், அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, முடிச்சூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி கடல்போலக் காட்சியளித்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பலர் முதல் தளத்திற்கு இடம்பெயர்ந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையின்போது பொதுமக்கள் வாகனங்கள், புத்தகங்கள், சான்றிதழ்கள் என பலவற்றை இழந்ததால் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்தையும் பத்திரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னையில் அதிகப்படியான கன மழை பெய்த காரணத்தால், நேற்று மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிக்குள்ளாகினர். பல சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது.
மேலும், தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை வியாபாரிகள் கடுமையாக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த காய்கறிகள் அனைத்தும் 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வரப்படுகின்றன.
கடந்த வாரத்தில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 115 ரூபாய்க்கும், 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், 40க்கு விற்கப்பட்ட கேரட், பீட்ரூட் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பீன்ஸ் 250 ரூபாய்க்கும், புடலங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்தால் இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, மளிகைப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைந்து பொதுமக்கள் பலரும் அதிக அளவிலான பொருள்களை வாங்கி குவித்து வருகின்றனர். மழையைப் பயன்படுத்தி காய்கறி மட்டுமல்லாமல் மளிகைப் பொருள்களின் விலையையும் வியாபாரிகள் உயா்த்தியுள்ளனா். எண்ணெய், பருப்பு, அரிசி உள்பட பல்வேறு பொருள்களின் விலையை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர்.
ஒரு பக்கம் மழை வெள்ளம், மறுபக்கம் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்தி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இத்தனை அக்கப்போருக்கு மத்தியில் நேற்று இரவு முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications