நீலகிரியின் தூக்கத்தை கெடுத்த பேய் மழை.. மலப்புரம் மலை பாதையில் திக்திக்.. கேரளா உடனே செய்த விஷயம்
ஊட்டி: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழை காரணமாக கூடலூர் - மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவுகள் மற்றும் பாறைகள், மரங்கள் விழுந்துள்ளது. இதன் காரணமாக வழிக்கடவு பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியை மூடிய போலீசார் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். கூடலூர் - மலப்புரம் மலைப்பாதையில் நேற்று இரவு திக்திக் நிமிடங்களாக இருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கும், மைசூருக்கும், கேரளாவின் மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் நேரடியாக மலைப்பாதை உள்ளது. கூடலூரில் இருந்து செல்லும் இந்த சாலைகள் நேராக சென்றால் மலப்புரத்துக்கு போகும். இடையில்பிரிந்து சென்றால் கோழிக்கோடு, வயநாடுக்கும் போகும் .

நீலகிரி மாவட்டம் மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ளதால், கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், கேரளாவின் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும். குறிப்பாக கூடலூர், பந்திப்பூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கும்.
இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், எடக்கரா, வழிக்கடவு மற்றும் தமிழக எல்லை கீழ்நாடுகாணி வனப்பகுதியில் நேற்று மாலை தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு தேன்பாறா என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகளும் உருண்டு விழுந்தன. இதனால் கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆய்வு செய்ய கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது தமிழக கேரள எல்லையான வழிக்கடவு அருகே உள்ள ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்திருந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து கனமழை பெய்ததால் மலைப்பாதையில் பல இடங்களில் மரங்களும் சரிந்து விழுந்து கொண்டே இருந்தது.. இதைத்தொடர்ந்து கூடலூர் - மலப்புரம் மலைப்பாதையில் வல்லக்கடவு வழியாக பயணிக்க போலீசார் தடை விதித்தனர்.
மண் சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் நீண்ட நேரமாக நின்ற வாகனங்கள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல் கூடலூரில் இருந்து சென்ற வாகனங்களும் நாடுகாணி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டன. மலப்புரம் - கூடலூர் செல்லும் மலைப்பாதையில் கனமழையால் மண் சரிவுகளும் மரங்களும் சரிந்து விழுந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் அறிவித்தனர்.
மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என நிலம்பூர் தீயணைப்புத்துறையினர் சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியிட்டு அலர்ட் செய்தனர். மலைப்பாதையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இரவு போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications