புயல்.. சென்னையில் நாளை இசிஆர், ஓஎம்ஆரில் பஸ்கள் ஓடாது.. ஐடி ஊழியர்களுக்கு WFH
சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் நாளை பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் நாளை வீட்டிலிருந்து பணி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புயல் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க, அனைத்து தயாரிப்புகளையும் முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை வந்துள்ள தகவல்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில், புயலால், நாளை கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த அனுமதி இல்லை.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை தவிர மற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையுடன் 60 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications