கோவையை 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப் போகும் புயல் மழை? – வெதர்மேன் தகவல்
கோவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு புயல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோயம்புத்தூர் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம் சொன்னபடியே அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்று பெயரிட்டுள்ளனர். தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை காலை இந்தப் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
பொதுவாக புயல் என்றால் கடலோர மாவட்டங்கள் உச்சகட்ட எச்சரிக்கையில் இருக்கும். ஆனால் ஃபெஞ்சல் புயல் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், ஞாயிறு (டிசம்பர் 1) மற்றும் திங்கட்கிழமைகளில் (டிசம்பர் 2) கோவை “நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது பாண்டிச்சேரி அருகே கரையை கடக்கும்.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் நகரின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.
இதன்மூலம் கோவை மாவட்டத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை பெய்ய போகிறது. கடைசியாக 1977 ஆம் ஆண்டு கோவையில் புயல் மழை பெய்தது. இந்தத் தலைமுறையில் முதல் முறையாக நாம் நேரடியாகப் பார்க்கப் போகிறோம். கோவையை கடக்கும்போது அது வலுவிழந்து இருக்கும். ஆனால் மழை மேகங்கள் உற்பத்தி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவு.
ஞாயிறு முதல் செவ்வாய் வரை நீலகிரி பயணம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்விலிருந்து கொங்கு மண்டல மாவட்டங்களின் மற்ற பகுதிகள் பரவலாக கனமழையைக் காணும். முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக பாதுகாப்பை உறுதி செய்யலாம்.” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications