கொந்தளிக்கும் கடல்.. நாளை முதல் 4 நாள் தமிழக மக்களே கவனமாக இருங்க.. முக்கிய ‛வார்னிங்’
சென்னை: நாகை முதல் திருவள்ளூர் வரை கடற்கரைகளில் 9 முதல் 12 அடி உயரத்துக்கு அலை உருவாகும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த மழை இன்று முதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, டெல்டா மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைக்கு முக்கிய காரணம் என்பது வங்கக்கடலில் நாளை உருவாகப்போகும் ஃபெங்கல் புயல் தான்.
பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தமிழகத்தில் இன்று முதல் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் தங்களின் படகுகளை கரைக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தமிழக கடற்கரைகளில் கடல் சீற்றமாகவும், 9 அடி முதல் 12 அடி வரை அலைகள் எழும் என்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛நவம்பர் 26 முதல் நவம்பர் 30 வரை நாகப்பட்டினத்தில் இருந்து திருவள்ளுர் வரையிலான கடற்கரையோரங்களில் கடல் சீற்றத்தால் 9 அடி முதல் 12 அடி வரை உயரமான அலைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கடலுக்கு அருகே செல்வதை கட்டாயமாக தவிர்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications