பெங்களூரை நடுங்க வைக்கப்போகும் குளிர்.. அடுத்த 2 நாள் முக்கியம்.. வானிலை மையம் தந்த வார்னிங்
பெங்களூர்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெங்களூரில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும் என்று பெங்களூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் உருவானது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உளபட பல மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது.

இந்த புயல் நேற்று மாலை கரையை கடக்க தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் அந்த புயல் மொத்தமாக கரையை கடந்தது. புதுச்சேரி அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடந்து முடித்தது. இருப்பினும் கூட புயலின் தாக்கம் என்பது இருந்து வருகிறது.
இந்த புயலின் தாக்கம் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் எதிரொலிக்கிறது. நேற்று பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடுன் காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை என்பது வழக்கத்தை விட 4.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து 22.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது வழக்கத்தை விட 3.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து 20.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.
அதேபோல் இன்று பெங்களூரில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் காணப்படுகிறது. சில இடங்களில் லேசாக மழையும் பெய்து வருகிறது. அதோடு குளிர் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த குளிருக்கு பெஞ்சல் புயல் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த 2 நாட்கள் பெங்களூரில் குளிர் என்பது அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெங்களூர் வானிலை ஆய்வு மையம் சார்பில், ‛‛பெங்களூரில் அடுத்த 2 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை என்பது 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் தான் இருக்கும். இந்த வெப்பநிலை என்பது 25 டிகிரி செல்சியஸை தாண்ட வாய்ப்பில்லை. இதனால் இரவில் குளிர் என்பது அதிகரிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் ‛எப்' டாக்டர் புவியரசன் கூறுகையில், ‛‛பெஞ்சல்புயலால் பெங்களூரில் காலநிலை மாறி உள்ளது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. புயல் வரும்போது அதிகபட்ச வெப்பநிலை குறைந்து குளிர் ஏற்படும். இதனால் அடுத்த 2 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை என்பது 24-25 டிகிரி செல்சியஸை தாண்டாது.
அதேபோல் குளிர்காலம் என்பது வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி அல்லது அதற்கு பிறகு பெங்களூர் மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாவட்டங்களில் தொடங்கும். அதுவரை வடகிழக்கு காற்று என்பது தொடர்ச்சியாக இருக்கும். புயல் காரணமாக கடலில் இருந்து வடகிழக்கு காற்று என்பது கிடைக்கிறது. இந்த காற்று நின்ற பிறகு தான் குளிர்காலம் பற்றி சரியாக கூற முடியும் '' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications