சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. ஆனால், நேற்றைய தினம் சட்டென வானிலை மாறி, மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இதற்கிடையே இன்றும் நாளையும் கூட மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மாநிலம் முழுக்க வெப்பம் அதிகரித்து வருகிறது. எப்போதுமே பிப்ரவரி இறுதியிலேயே வெப்பம் ஆரம்பித்துவிடும். இந்த முறை பிப்ரவரி மாதம் பெரியளவில் வெப்பம் இல்லாத சூழலில், மார்ச்சிலும் மிதமான வெப்பமே இருந்தது. ஆனால், ஏப்ரல் வந்தவுடன் வெப்பம் ஆரம்பித்துவிட்டது.

வானிலை மையம்
இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில், நேற்றைய தினம் பொதுமக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் வகையில் மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இதற்கிடையே இன்றும் நாளையும் கூட மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும்
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இன்றைய தினம் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்கள்
நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 5, 6ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலைப் பொறுத்தவரை வரும் 6ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனினும் படிப்படியாக உயரக்கூடும்.. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் 6ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (03-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்... மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications