இறுதிச்சுற்று மழை.. இந்த முறை டார்கெட் டெல்டாவுக்கா? அறிகுறி எல்லாம் அப்படியே பொருத்தமா இருக்கே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக இறுதி சுற்று மழை பெய்து வரும் நிலையில், இம்முறை டெல்டா மாவட்டங்களை குறி வைத்து மழை கொட்டுகிறதா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அதிக மழை கொட்டி வருகிறது.
வட கிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி 2 பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதமே தமிழ்நாடு எதிர்கொண்டது. டிசம்பர் தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரு மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த 4 மாவட்டங்களும் பேரழிவை சந்தித்தன. பல நாட்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல ஆயிரம் கோடி மதிப்பில் பொருட்சேதமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

அதேபோல் டிசம்பர் இறுதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்கள் வரலாறு காணாத பெரு மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாகின. இந்த பாதிப்புகளில் இருந்தும் மாவட்டங்கள் மீண்டு வந்துகொண்டு இருக்கின்றன. முதலில் வட தமிழ்நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்தியது அடுத்து தென் தமிழ்நாட்டை தாக்கிய நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களை மழை குறி வைக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
காரணம் தற்போது வடகிழக்கு பருவ மழையின் இறுதி சுற்று மழை தமிழ்நாட்டில் கொட்டி வருகிறது. இதில் அதிகளவிலான மழை டெல்டா மாவட்டங்களேயே பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் சீர்காழியில் 22 சென்டி மீட்டர் மழையும், திருவாரூரில் 21 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 20 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 18 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினத்தில் 17 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவிக்கையில், "நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை தொடரும். ஒரு சில இடங்களில் மிககனமழை பொழியும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு." என்று குறிப்பிட்டு உள்ளார். வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களை விட டெல்டாவில் இம்முறை அதிக மழை பெய்து வருவதால் இறுதிச் சுற்றில் தங்கள் பகுதிதான் இலக்காகி உள்ளதோ என்று மக்கள் எண்ணத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications