பேய் மழை.. குமரி மாவட்டத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்.. சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி!
கன்னியாகுமரி: மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் கோதையாறு அருகே மூக்கறைக்கல் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் சிக்கி சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை நீடித்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்துள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. கனமழையால் கோதையாறு அருகே மூக்கறைக்கல் பகுதியில் தாழ்வான பகுதிகளில் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வெள்ள நீரில் சிக்கி சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், அடித்துச் செல்லும் வெள்ள நீரில், செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவால் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து வருவதால், அச்சத்துடனே அப்பகுதியைக் கடந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications