மிக்ஜாம் புயல்: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் உணவு.. அமைச்சர் தகவல்
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது என்றும், நாளை உணவு பொட்டலங்களுடன் மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதுவும் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்தது. மழை விட்டு 24 மணி நேரத்தை கடந்து விட்டது. எனினும், பல இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது. புறநகர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நாலை முதல் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது: மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் ஒன்று புதிதாக வந்துள்ளது. நாளைய தினத்தில் இருந்து மாடிகளில் தங்கியிருப்பவர்களுக்கு வேண்டிய உணவுகள், வேறு விதமான வசதிகள் ஆகியவை வழங்கப்படும். இன்று மாலை இரண்டு இடங்களில் உணவு பொட்டலங்கள் வழங்கியிருக்கிறார்கள்.
நாளை உணவு பொட்டலங்கள் மட்டும் இல்லை அவர்களுக்கு மருத்துவ சேவைகளோ, அல்லது வேறு என்ன தேவை இருக்கும் என்று சொல்கிறார்களோ அதை வழங்குவதற்கு வேண்டிய வேலைகளை செய்ய இருக்கிறோம். மீட்பு பணிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக நடக்கிறது. அரசு இயந்திரம் முழுவதுமாக இறங்கி வேலை பார்க்கிறது. அமைச்சர்கள் அவரவருக்கு ஒதுக்கிய பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் வைத்து இருக்கிறோம். இப்போது கூடுதலாக மீட்பு படையினர் கேட்டு இருக்கிறோம். இதன் மூலம் 855 மீட்பு படையினர் வந்து விடுவார்கள். இது தாரளமாக இருக்கும். அதுபோக அடுக்கு மாடி கட்டிடங்களில் சிக்கியிருப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கொடுக்கும் வேலையை இன்று ஆரம்பித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications