சென்னை + 13 மாவட்டங்களில்.. அடுத்த 3 மணி நேரம் மழை விட்டு விளாச போகுது! ரெட் அலர்ட் வேற இருக்கே
சென்னை: தமிழ்நாட்டில் இந்த மே மாதம் பரவலாக மழை பெய்தே வருகிறது. இதனால் பல இடங்களில் கத்திரி வெயிலின் தாக்கமே கூட தெரியாத அளவுக்கே வெப்பம் இருந்தது. இதற்கிடையே மாநிலத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு கோடைக் காலம் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது. மே மாதம் கத்திரி வெயில் காலத்தில் எப்போதும் வெப்பம் படுத்தி எடுக்கும். எப்போது தான் கத்திரி வெயில் முடியும் என்றே மக்கள் காத்திருப்பார்கள். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாகக் கத்திரி வெயில் காலத்திலேயே பல இடங்களில் மழை கொட்டியது.

சென்னை மழை
குறிப்பாகச் சென்னையில் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழை கொட்டியது. அந்தளவுக்கு வானிலை மொத்தமாக மாறியிருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குளிர்ந்து குளிர்ச்சியான வானிலையே நிலவியது. தமிழ்நாட்டில் இன்று தான் கத்திரி வெயில் காலமே முடிகிறது.. ஆனால், அது கூட மக்களுக்குப் புலப்படாத வகையில் மழை வெளுத்து வாங்கியிருந்தது.
சென்னை+ புறநகர்
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விட்டு விளாசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் மழை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறையில் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் வேற இருக்கே
முன்னதாக வானிலை மையம் நாளையும் நாளை மறுநாளும் கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது. மேலும், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. வானிலை மையம் தினசரி செய்திக்குறிப்பில் மேலும், "இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தொடரும்
நாளை மற்றும் மே 30ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ழயும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications