‛‛சென்னை + 12 மாவட்டங்கள்’’.. இன்று காலை 10 மணி வரை மழை எச்சரிக்கை.. இடி + மின்னலும் இருக்காம்
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், மேலும் 9 மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. அங்கு பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சில மாவட்டங்களுக்கு ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை என்பது தாமதமாகி உள்ளது.

இருப்பினும் கூட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் முற்றிலுமாக மறைந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை உள்பட அதனை சுற்றிய மேலும் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications