பேய் காற்று + கனமழை.. சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது! புது அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் நிலவிய டிட்வா புயலானது, வடதிசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.
அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) மாலை 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல புயல் நெருங்கி வருவதால், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி என பரவலாக மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications