3 நாட்களாக பட்டினி.. மன உளைச்சல்.. ஸ்ரீவைகுண்டம் ரயிலில் தவிக்கும் பயணிகளை மீட்க ஜிகே வாசன் கோரிக்கை
சென்னை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 3 நாட்களாக சிக்கியுள்ள சிறுவர்கள், முதியோர் உள்பட ரயில் பயணிகள் உண்ண உணவும், தண்ணீரும், குழந்தைகள் பால் இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழக அரசும், தென்னக இரயில்வே நிர்வாகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தென் தமிழகத்தையே புரட்டிப் போட்டுள்ளது பெருமழை. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விடாமல் கொட்டிய பேய்மழையால் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. சாலைகள் சிதைந்து போயுள்ளன. ரயில் தண்டவாளங்கள் பெயர்ந்துள்ளன. ரயில் போக்குவரத்து சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் சென்னைக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
சனிக்கிழமை இரவில் இருந்து 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். குடிநீர், உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர் பயணிகள். ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் ஊர் திரும்ப தமிழக அரசும், தென்னக இரயில்வேவும். இலவசமாக சிறப்பு பேருந்தோ அல்லது சிறப்பு இரயிலோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. போக்குவரத்து சாலைகள் அனைத்து துண்டிக்கப்பட்டு யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று முன்தினம் திருச்நெந்தூரில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறபட்டுவிட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் இரயில் லோகோ பைலட்டால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதால் தண்டவாளத்தை பார்க்க முடியாததால் இரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தியுள்ளார். சமயோஜிதமாக சரியான நேரத்தில் இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிற்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 800க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவர்களின் 300 பேர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 500 பேர்கள் ரயில்வே நிலையத்திலேயே உள்ளனர். அவர்கள் மீட்பதற்குள் வெள்ளம் அதிகமானதால் மீட்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள சிறுவர்கள், முதியோர் உள்பட ரயில் பயணிகள் உண்ண உணவும், தண்ணீரும், குழந்தைகள் பால் இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.
தமிழக அரசும், தென்னக இரயில்வே நிர்வாகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும். இரயில் பயணிகள் மிகுந்த பயத்திலும், மனஉளச்சலிலும் தவித்து வருகின்றனர். அவர்கள் ஊர் திரும்ப பணம் தேவையான அளவு இருக்குமாக என்று தெரியவில்லை. போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் வடிந்தவுடன், பயணிகளை மீட்டு சிறப்பு பேருந்திலோ அல்லது சிறப்பு இரயிலிலோ பயணிகளை அவரவர் ஊர்களுக்கு செல்ல தமிழக அரசும், தென்னக இரயில்வே நிர்வாகமும் இலவசமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜிகே வாசன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications