அடித்துக் கொட்டிய “ஆலங்கட்டி மழை”.. பெங்களூர் அப்படியே குளிர்ந்து போச்சு!
பெங்களூர்: வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்பைவிட வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த பருவமழை காலத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இந்தாண்டு அங்கு வறட்சி நிலவியது. வெப்பமும் உச்சம் தொட்டதால் பெங்களூர்வாசிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர்.
பெங்களூர் மக்கள் கடும் வெயிலை எதிர்கொண்டு வந்த நிலையில், மக்களின் மனதை குளிர வைக்கும் வகையில் இன்று பெங்களூரில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, சாந்தபுரா மற்றும் ஆனேகல் தாலுகாவின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்தது. கடும் வெப்பத்திற்கு இடையே இந்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்கட்டி மழை பெய்யும் காட்சிகளை பலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த மாதம் முழுக்கவே வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பம் குறைந்து வருகிறது. இன்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ள நிலையில், இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 7ஆம் தேதியான நாளை கர்நாடகாவில் தக்ஷின கன்னடா, பிடார், கலபுர்கி, ஷிமோகா, யாதகிரி, சிக்கமகளூரு, குடகு, மைசூர், சாம்ராஜ்நகர், மாண்டியா, ராமநகரா, பெங்களூரு சிட்டி, பெங்களூரு ரூரல், கோலார், துமகுரு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications