"ஹாமூன்" ஆட்டம் ஆரம்பம்.. வங்கக்கடலில் "ஆக்ரோஷ" புயல்.. இன்று மாலை வங்கதேசத்தில் கரையை கடக்கிறது
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் இன்று மாலை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்கியுள்ளது.. இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயல் ஒன்று உருவானது. இதற்கு ஹாமுன் என்று பெயர் சூட்டப்பட்டது.. பின்னர், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஹாமூன் புயலாக வலுப்பெற்றது.

இது ஒடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வலுவிழக்கும்: அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவும் நிலையில், வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து, வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று மாலை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தார்.
இன்று நகர்கிறது: அதில் "அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. காலை 8.30 மணிஅளவில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து, வங்கதேச கரையை கெபுபரா - சிட்டகாங் இடையே இன்று அக்டோபர் 25ம் தேதி மாலை கடக்கக்கூடும்.
தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்குமா: இன்று மாலை வங்க தேசத்தில் கரையை கடக்கும் ஹமூன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதாவது இருக்குமா? என்ற கலக்கம் நிலவியது.. ஆனால் இந்த புயல், வடகிழக்கு திசையில் நகர்ந்து, பலவீனமடைந்து சாதாரண புயலாக கெப்புபராவிற்கும் சிட்டகாங்கிற்கும் இடையில் கரையை கடந்துவிடுவதால், தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் மழை கிடைக்கவோ, பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் நிம்மதி தகவலை தந்திருக்கிறது.
கரையை கடந்தது: அதேபோல, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 23-ம்தேதி நிலவிய மிக தீவிர தேஜ் புயல், நேற்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் தெற்கு அல்கைடா அருகே ஏமன் கடற்கரையை கடந்தது. இதனால், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை: இன்று மாலை, புயல் கரையை கடக்கும்போது, வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மணிக்கு, 130 கி.மீ, வரை; வடமேற்கு பகுதியில், 100 கி.மீ வரையும், மத்திய வங்க கடல் பகுதியில், 55 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.. எனவே, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது..












Click it and Unblock the Notifications