மே 1 முதல் சென்னையில் வெயில் கொளுத்தும்.. மற்ற மாவட்டங்கள் நிலை என்ன? வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்
சென்னை: "மே 1 முதல் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தும்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம். உள் தமிழகம், தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் மே 1 அல்லது 2ஆம் தேதி மழை மீண்டும் தொடங்கும்" என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது வட தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் கடும் வெயில் இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் கூறி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை நிலவரம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். மே 1ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கடும் வெயிலும், பிற மாவட்டங்களில் மழையும் பெய்யக் கூடும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "மே 1 ஆம் தேதியில் இருந்து KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை திரும்பும். மே 1 முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடும் வெயிலும் சுட்டெரிக்கும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42°C மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது. எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.
KTCC மற்றும் வட தமிழ்நாடு மக்கள் கவனிக்கவும்: மே 1,2 முதல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்கவும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications